பிசியோதெரபி சிகிச்சை கிராமங்களுக்கும் அதிகம் போக வேண்டும் – ஜி.கே.வாசன்
சென்னை: தமிழ்நாட்டில் பிசியோதெரபி சிகிச்சையை கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், ‘'இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் பிசியோ தெரபிஸ்ட்கள் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

அவர்களின் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். பிற மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ‘‘மாநில பிசியோ தெரபி கவுன்சில்'' செயல்பட்டு வருகின்றது.
எனவே தமிழகத்திலும் ‘‘மாநில பிசியோ தெரபி கவுன்சில்'' அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பிசியோ தெரபிஸ்ட்களின் தொழில் பாதுகாக்கப்பட்டு, முறையாக செயல்படுத்தப்படும்.
அதன் அடிப்படையில் பிசியோ தெரபிஸ்ட் கல்வி முறை ஒழுங்குபடுத்தப்படும். சமூகத்தில் இக்கல்விக்கு ஒரு நிரந்தர அங்கீகாரம் கிடைக்கும். ‘‘மாநில கவுன்சில்'' அமைப்பதற்கான அரசாணை ஏற்கனவே பிறக்கப்பட்டு இன்றுவரை அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பி.பி.டி முடித்த பிசியோ தெரபி பட்டாரிகள் கிளினிக்குகளை தொடங்குவதற்கு அவர்களுக்கென்று ஒரு வரையறையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
பிசியோ தெரபி அல்லாத பிற படிப்பு படிக்கின்றவர்கள் பிசியோ தெரபி கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை முறைகளை கையாள்வது தவிர்க்கப்பட மாநில சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிசியோதெரபித்துறை தனித்தன்மையுடன் படிப்படியாக வளர்ந்து, பல்வேறு நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றி உலகளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பிசியோ தெரபிஸ்ட்கள் தங்கள் படிப்பை பாராமெடிக்கல் பிரிவிருந்து நீக்கி தனித்துவம் கொண்ட மருத்துவ படிப்பாக இந்திய சட்டத்துறை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். எனவே அரசு அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மத்திய அரசு ஏஜென்சி பிசியோ தெரபி படிப்பினை தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடத்தி வருகின்றது. இதனையும் அரசு முறைப்படுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் முறையாகப் படித்து வெளிவரும் பிசியோ தெரபிஸ்ட்கள் தங்கள் சிகிச்சை முறையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.
அதற்கு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல் கிராமப் புற பகுதிகளிலும் பிசியோ தெரப்பிஸ்ட்களுக்கென்று பணியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இச்சிகிச்சைமுறை அளிக்கப்பட்டு இதன் பயன் அனைவரையும் சென்றடையும்.
எனவே மத்திய அரசும், மாநில அரசும் பிசியோ தெரபிஸ்ட்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அவர்களின் மருத்துவ சிகிச்சை முறைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications