ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மோடி அரசு வஞ்சித்து விட்டது: தடியடிக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மோடி அரசு தமிழக மக்களை வஞ்சித்து விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த அவசரச்சட்டம் இயற்றாமால் மோடி அரசு தமிழக மக்களை வஞ்சித்து விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீதான தடியடிக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்துவதற்கான தடையை நீக்க இந்த ஆண்டும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்கள் மீதும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த மத்திய அவசரச்சட்டம் இயற்றாமல் வஞ்சித்துவிட்டதாக கூறியுள்ளார்
காவல்துறையினர் நடத்திய தடியடிக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி அரசு வஞ்சித்துவிட்டது
இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்று கடந்த ஆண்டை போலவே பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருந்தது. ஆனால் இந்த ஆண்டும் தமிழக மக்களை மோடி அரசு வஞ்சித்துவிட்டது.

தடியடி மற்றும் மிரட்டல்கள்
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று பொங்கல் திருநாளான சனிக்கிழமையன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலான ஞாயிறன்று பாலமேட்டிலும் போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க மறுப்பு
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். ஆனால், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் பொங்கலுக்குப்பிறகுதான் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டது.

தடியடி தாக்குதலுக்கு கண்டனம்
அவசரச்சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக, தமிழக அரசு போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை உடடினயாக விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications