வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்தால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. ஜி. ராமகிருஷ்ணன் திட்டவட்டம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட சிபிஎம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் லோகநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக, திமுக, ஓபிஎஸ் அணி, தீபா என பலமுனை போட்டியால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே சிபிஎம் சார்பில் லோகநாதன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் லோகநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ஜி. ராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் சந்திக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுவதற்காக சிபிஎம் சார்பில் மக்களை அணுக இருக்கின்றோம். இந்தத் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்வு காண வேண்டும் என்ற முழக்கத்தோடு வாக்காளர்களை சந்திக்க இருக்கின்றோம்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே பணபட்டுவாடா பிரச்சனையை நாங்கள் சந்தித்திருக்கிறோம். அண்மையில் நடைபெற்ற 3 தொகுதி இடைத்தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுச் தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.
அதே போன்று நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு யார் முயற்சி எடுத்தாலும் அதை உறுதியாக தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்கிற போது கையும் களவுமாக பிடிபட்டால் அந்த வேட்பாளரின் தகுதியை நீக்கும் நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.