பிள்ளையாரை தூக்கிச் சென்ற அதிகாரிகள்... மீண்டும் தரக்கோரி மக்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் அருகே அரசு அதிகாரிகள் தூக்கிச் சென்ற பிள்ளையாரை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த மரவநத்தம் கிராமத்தில் அரசமரத்தடியில் இருந்த பிள்ளையாரை அரசு அதிகாரிகள் தூக்கிச் சென்றதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிள்ளையாரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மரவநத்தம் கிராமத்தில் சாலையோரம் இருந்த அரச மரத்தடியில் அப்பகுதி மக்கள் பிள்ளையார் சிலை ஒன்றை கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வைத்தனர். இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக புகார் கடிதம் வந்ததை அடுத்து அரசு அதிகாரிகள் அந்த சிலையை எடுத்து சென்றனர்.
பின்னர் அருகில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அவர்கள் சிலையை வைத்துச் சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அப்பகுதி மக்கள் மீண்டும் சிலையை அரசமரத்தடியில் வைக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து பெரம்பலூர் மாவட்டர் ஆர்டிஓ பேபி, தாசில்தார் மனோன்மணியம், மற்றும் கமிஷனர் ஆலயமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத மக்கள் அரசியல்வாதிகளின் சிலையை வைக்கத்தான் அரசு அனுமதி பெற வேண்டும் இந்து கடவுள்களின் சிலையை வைக்க அனுமதி பெற தேவையில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள் சிலையை வைப்பது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் எனக்கூறி உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.