சோனியாவை விமர்சித்த கிரிராஜை 'மென்டல் ஹாஸ்பிட'லில் சேர்க்கலாம்.. செலவை ஏற்க ரெடி- காங்.
சென்னை: சோனியா காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கை மனநல மருத்துவமனையில் சேர்க்கலாம் என்றும் அதற்கான செலவை ஏற்க தயார் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், சோனியா வெள்ளையாக இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்குமா? என்று கேட்டிருந்தார்.
அவரது இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரான நடிகர் ராஜ் பப்பர், அமைச்சர் பொறுப்பிலிருப்பவர் ஒருவர் இப்படி பேசுவதை ஏற்க முடியாது. இதற்கு முன் பல முறை சர்ச்சைக்குரிய வகையிலேயே அவர் பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்களை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால் உடனடியாக அமைச்சர் கிரிராஜ் சிங்கை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவரது மருத்துவச் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் தயார் என்றார்.