ஏ இதாம்லே இமான் அண்ணாச்சியோட 'பர்ஸ்ட் பொலிட்டிகல் ஸ்பீச்'.. கேட்டியளா?
சென்னை: "அம்மா"வுக்கு ரெஸ்ட் கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று பேசி தனது அரசியல் பேச்சை அதிரடியாக தொடங்கியுள்ளார் இமான் அண்ணாச்சி.
மக்கள் டிவியின் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை மற்றும் சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. சினிமாவிலும் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் முறைப்படி திமுகவில் இணைந்தார். இவரது உறவினர்தான் பேராயர் எஸ்றா சற்குணம். இந்த நிலையில் தனது முதல் அரசியல் பேச்சை கொளத்தூரில் கொடுத்துள்ளார் இமான் அண்ணாச்சி. கொளத்தூரில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவின்போது இமான் அண்ணாச்சி சிறப்புரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து....
நான் தூத்துக்குடிக்காரன்
நான் தூத்துக்குடியில் இருந்து நகைச்சுவை நடிகராகி விருதுகள் பெற வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். நிறைய இடங்களில் வேலை பார்த்து பிறகு டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தி இப்போது நடிகராகவும் ஆகிவிட்டேன்.
திமுகவால் நல்லாட்சி வரும்
சமீபத்தில் சென்னையில் பெருமழை பெய்து வீடுகள் மூழ்கியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உணவுகள் வழங்கினேன். தி.மு.க. தொண்டர்களும் உதவி செய்தார்கள். மக்கள் பட்ட கஷ்டங்களை அவலங்களையும் வெளிப்படுத்தி ஒரு நல்லாட்சி வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் திமுகவில் சேர்ந்தேன்.
நல்ல கட்சி திமுக மட்டும்தான்
எனக்கு தெரிந்த வரையில் நல்ல கட்சி திமுகதான். இந்த கட்சியால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். சிறு வயதில் இருந்தே எனக்கு திமுக தலைவர் கருணாநிதியை பிடிக்கும்.
இதுதான் ஓடுற வண்டி
திமுக தான் ஓடுகிற வண்டி, மற்ற கட்சிகள் ஓடாத வண்டி. ஓடுகிற வண்டியான திமு.ல் நான் ஏறிக்கொண்டேன். அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே முழக்கம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
கருணாநிதான் முதல்வர்
நிறைய பேர் நான்தான் முதல்வர் என்கின்றனர். அவர்கள் ஆசைகள் பலிக்காது. தமிழகத்தை நல்வழிப்படுத்தும் ஒரே தலைவர் கருணாநிதி. அவர்தான் முதல்வர் ஆவார்.
கருணாநிதி தலைமையில் நல்லாட்சி
5 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தது. அப்போது ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தை வளமாக்கினார். அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அந்த திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
மக்கள் தெளிவாகி விட்டார்கள்
இப்போது மக்கள் தெளிவாகி விட்டார்கள். மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்த தயாராகி விட்டார்கள். இளைஞர் பட்டாளம் ஏமாந்து விடக்கூடாது. உங்கள் ஓட்டுக்களை வீணாக்கி விடாதீர்கள். கருணாநிதியை முதல்வராக்கினால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும்.
ஸ்டிக்கர் ஆட்சி
ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக ஆட்சி தொடங்கியது. அதன் உச்சகட்டமாக மழைவெள்ளத்தின் போதுகூட சோத்து பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.
எல்லாவற்றையும் முடக்கியவர் ஜெ
திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று திமு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கினார் ஜெயலலிதா.
108 ஆம்புலன்ஸின் அவல நிலை
அதேபோல முந்தைய திமுக ஆட்சியில் 108 அவசர ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. கூப்பிட்ட உடன் மின்னல் வேகத்தில் வருவார்கள். பல லட்சம் பேர் உயிரை காத்த, உயிர் காக்கும் திட்டத்தை ஜெயலலிதா அரசு முடக்கி விட்டது. அதற்கு நானே சாட்சி. 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையே கொத்தி குதறி விட்டார்கள்.
ஷூட்டிங் போன இடத்தில்
ஒரு வாரத்திற்கு முன்பு, ஷூட்டிங் சம்பந்தமாக மதுரவாயல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தேன். சாலை விபத்தில் படுகாயமுற்று கிடந்த ஒரு பெண்ணையும், ஒரு பையனையும் காப்பாற்ற அங்கு நின்றவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
ஆம்புலன்ஸே வரலை
108-க்கு போன் செய்து விட்டு காத்திருந்தார்கள். நானும் எனது பங்கிற்கு 108-க்கு போன் போட்டேன். வரவில்லை. காயமடைந்த இருவருக்கும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் எனது காரில் அவர்கள் இருவரையும் கொண்டு சென்று தாம்பரத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
இன்னும் ஐசியுவில்
ரூ.10 ஆயிரம் கட்ட சொன்னார்கள். அதை கட்டி, தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களை சேர்த்து விட்டு அவர்களது குடும்பத்துக்கு தகவல் கொடுத்தேன். அந்த பெண் குணமாகி விட்டாள். பையன் இன்னும் ஐசியுவில் இருக்கிறான்.
போய்ட்டு வந்த பிறகு போன்
ஆஸ்பத்திரிக்கு சென்று ஒரு மணி நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸில் இருந்து போன் வந்தது. நீங்கள் வர வேண்டாம். வீட்டுக்கு போங்கள் என்று கூறிவிட்டேன். நல்லாட்சி, நல்லாட்சி என்று ஆளும்கட்சியினர் சொல்கிறார்கள். இதுவா நல்லாட்சி.
"அம்மா"வுக்கு ரெஸ்ட் கொடுப்போம்
தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டில் ஆட்சி நடந்ததா? நடக்கிறதா?. இருக்கும் திட்டங்களை மெருக்கேற்றாமல் அதை சீரழித்ததுதான் இந்த ஆட்சியின் பெருமை. இப்போது "அம்மா"வுக்கு தேவை ரெஸ்ட். கலைஞர் தமிழ்நாட்டை பார்த்துக் கொள்வார் என்றார் இமான் அண்ணாச்சி.