குழப்பம், முடக்கம், பாதிப்பு.. இதுதான் பாஜகவின் சாதனையா... ஜி.கே.வாசன் கேள்வி!
தூத்துக்குடி: பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் அளித்த வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றவில்லை. ஆதார் அட்டையில் குழப்பம், ஊரக வளர்ச்சி துறையில் முடக்கம், சுய உதவி குழுக்கள் முடக்கம், நில உசச வரம்பு சட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு ஆகியவைதான் பாஜகவின் சாதனைகளாக உள்ளன என்று கூறியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைக்காரன் மடத்தில் த.மா.கா. சார்பில் காமராஜரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில்,

நாட்டில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று கூறுபவர்கள் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துதான் முதல் மாநிலமாக மாற்றியுள்ளனர். 2016ஐ கருத்தில் கொண்டு மக்களுக்கான ஒரு மகத்தான இயக்கமாக தமாக மாறி வருகிறது. காமராஜர் ஆட்சியில்தான் நேர்மை, எளிமை, கடின உழைப்பு, புரட்சி கல்வி, வளர்ச்சி என எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி கண்டது. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தால் பலகோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மதிய உணவு திட்டத்திற்கான ரூ.2 ஆயிரம் கோடியை குறைத்து ஓதுக்கியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காமராஜர் சிறுபான்மையினர் உள்பட 8 அமைச்சர்களை தமது அமைச்சரவையில் நியமித்து சிறப்பாக ஆட்சி நடத்தியவர்.
பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் அளித்த வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றவில்லை. ஆதார் அட்டையில் குழப்பம், ஊரக வளர்ச்சி துறையில் முடக்கம், சுய உதவி குழுக்கள் முடக்கம், நில உசச வரம்பு சட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு ஆகியவைதான் பாஜகவின் சாதனைகளாக உள்ளன.
தமிழகத்திலும் மக்கள் மாற்றத்தைதான் விரும்புகின்றனர். மக்கள் ஆசிர்வாதத்தால் தமாகா தயாராகி வருகிறது. தமிழகத்தில் 2016ல் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். வாசன்.












Click it and Unblock the Notifications