ராஜ்யசபா சீட் பேராசையால் கூட்டணி கிடைக்காமல் தனியே தன்னந்தனியே தத்தளிக்கும் ஜிகே வாசன்!
சென்னை: ராஜ்யசபா எம்.பி.யாகி பாஜக அமைச்சரவையில் இணைந்து மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என்ற பேராசையால்தான் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை அதிமுகவும் திமுகவும் கூட்டணியில் சேர்க்க மறுத்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுவார்த்தை நடத்தினார் வாசன். வாசனுக்கு கணிசமான சீட்டுகளை ஒதுக்கி இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைக்க அதிமுக தரப்பு முடிவு செய்திருந்தது.
ஆனால் திடீரென தென்னந்தோப்பு சின்னத்தை வாசன் பெற்றார். இதில் அதிமுக தரப்பு அதிருப்தி அடைந்தது. இருந்தபோதும் கடைசியாக 5 தொகுதிகளை ஒதுக்கி தென்னந்தோப்பு சின்னத்தில் நிற்க அதிமுக ஒப்புதல் தெரிவித்தது.

ராஜ்யசபா சீட் பேரம்
அப்போது சசிகலா, ஜெயலலிதாவை நேரில் சந்தித்த வாசன் 5 தொகுதிகளுடன் தனக்கு ராஜ்யசபா சீட் ஒன்றையும் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். மாநில கட்சி நடத்தும் உங்களுக்கு எதற்கு ராஜ்யசபா சீட் என இருவரும் கேள்வி எழுப்பிவிட்டு பதில் சொல்வதாக அனுப்பிவிட்டனர்.

மத்திய அமைச்சராக...
பின்னர்தான் அதிமுக மூலம் ராஜ்யசபா எம்.பி.யாகி பின்னர் பாஜக அணிக்கு தாவி மத்திய அமைச்சராக வாசன் திட்டமிட்டிருப்பதை அதிமுக தரப்பு அறிந்து கொண்டது. இதனால் கடைசி நிமிடத்தில் வாசனை கழற்றிவிட அவர் வேறுவழியே இல்லாமல் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார்.

திமுகவிடமும் ராஜ்யசபா சீட்
இதேபோல் உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்தி திமுக கூட்டணிக்கு போய்விடலாம் என திட்டமிட்டார் வாசன். அங்கேயும் ஒரு ராஜ்யசபா சீட் தேவை எனக் கூறி பேரம் பேசியது தமாகா தரப்பு. அதுவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நியமிக்கப்படாத நிலையில் சரியான வாய்ப்பு என கருதி பேச்சுகளை நடத்தியது வாசன் தரப்பு.

வாசனுக்கு நோ
ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவை எனக் கூறி வாசனை வெளியேற்றிவிட்டது கனிமொழி தரப்பு. மேலும் வாசனுக்கு எதற்கு ராஜ்யசபா சீட் தரனும்? நம்ம கட்சியில் ஆளா இல்லை? எனவும் கொந்தளித்திருக்கிறார் கனிமொழி. ஆனாலும் விடாது கருப்பாக தற்போது காவிரிக்கான அனைத்து கட்சி கூட்ட அழைப்பை பயன்படுத்திக் கொண்டு திமுகவுடன் நெருங்கிப் பார்ப்போம் என முடிவு செய்திருக்கிறாராம் வாசன்.
இலவுகாத்த கிளி!












Click it and Unblock the Notifications