திருச்சியில் நாளை பிரம்மாண்ட பொதுக்கூட்டம்- புதிய கட்சி பெயரை அறிவிக்கிறார் ஜி.கே.வாசன்!!
திருச்சி: காங்கிரசில் இருந்து விலகிய ஜி.கே. வாசன் நாளை திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமது கட்சி பெயரை அறிவிக்க இருக்கிறார்.
காங்கிரஸை விட்டு வெளியேறிய வாசன் அணியின் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இதற்காக பொன்மலை, ஜி.கார்னர் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கூட்ட மேடை 120 பேர் அமரும் வகையில் 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வரும் மேடையின் வலது புறம் வளமான தமிழகம் என்ற வாசகத்துடன் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை படமும், இடது புறம் வலிமையான பாரதம் என்ற வாசகத்துடன் டெல்லி செங்கோட்டை படமும் அமைக்கப்படுகின்றன.
மேடையின் முன்புறம் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணிகளை வாசன் அணியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர், ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா உள்பட பலர் பார்வையிட்டனர்.
இந்த மாநாட்டின் தொடக்கமாக லஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வாசன் வருகிறார். முன்னதாக மேடை அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முதலில் பேசுகின்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் ஜி.கே.வாசன் புதிய கட்சியின் பெயர், சின்னம், கொள்கைகளை வெளியிட்டு பேசுகிறார்.
மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்களை அழைத்து வருவதற்காக ஆயிரம் பேருந்துகள்,. 8 ஆயிரம் வேன்கள், 3 ஆயிரம் கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த பொன்மலை ரயில்வே மைதானம், மன்னார்புரம் ராணுவ மைதானம் உள்ளிட்ட 7 இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜி.கே.வாசன் நேற்று அறிமுகம் செய்த கட்சியின் புதிய கொடியுடன் தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரண்டு வர உள்ளனர். இநத கூட்ட ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காகவும், மாநாட்டை அறிவிக்கும் வகையில் ராட்சத பலூனை பறக்க விடவும் இன்று ஜி.கே.வாசன் திருச்சிக்கு வருகிறார்.












Click it and Unblock the Notifications