ஏதோ பிரைவேட் கம்பெனி மாதிரி தமாகாவை நடத்துகிறார் வாசன்... "அதிமுக" ஞானசேகரன்' பொளேர்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தனியார் நிறுவனமாக நடத்தி வருகிறார் ஜி.கே.வாசன் என்று அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த வேலூர் ஞானசேகரன் சாடியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைக்காததற்கு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானசேகரன். இதனால் கடந்த 2 மாதங்களாக தமாகாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
அத்துடன் அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து கடிதமும் அனுப்பியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா, இன்று தம்மை சந்திக்க ஞானசேகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தமாகாவில் இருந்து நீக்கம்
இதனடிப்படையில் தாம் அதிமுகவில் இணைய உள்ளதாக அறிவித்தார் ஞானசேகரன். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமாகா துணைத் தலைவர் பதவியில் இருந்து நேற்று ஞானசேகரன் நீக்கப்பட்டார்.

அதிமுகவில் ஐக்கியம்
சென்னை போயஸ் கார்டனில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் ஞானசேகரன். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மநகூதான் காரணம்
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது மிகப் பெரிய தவறு. தமாகாவின் வாக்கு சதவீதம் கடுமையான சரிவுக்கு இந்த கூட்டணியே காரணம். இதை கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அறிவார்கள். ஆனால் இதன் பின்னரும் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக விரும்பாமல் அதன் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறார் வாசன்.

ஜனநாயக கட்சியே அல்ல
இதை எதிர்த்துதான் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருக்கிறேன். தமாகா ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இன்னமும் அக்கட்சிக்கு பொருளாளர் கிடையாது; செய்தித் தொடர்பாளர் கிடையாது; டிவி சேனல் விவாதங்களில் பங்கேற்கும் குழு கிடையாது.

தனியார் நிறுவனம்
தமாகாவை தனியார் நிறுவனம் போல நடத்தி வருகிறார் வாசன். மூப்பனார் உடல்நலக் குறைவாக இருந்த போது ஜிகே வாசனை எம்.பி.யாக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால் மூப்பனாரோ, நான் இன்னமும் சாகவில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் எனக் கூறி ஞானதேசிகனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்.

உறவினர்கள் ஆதிக்கம்
தற்போது தமாகாவில் ஜி.கே.வாசனின் உறவினர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு ஞானசேகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications