தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ஞானதேசிகன் நியமனம்! மோகன் வர்கீஸ் உட்பட 11 பேர் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளராக கே. ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இன்று தமிழக அரசு அதிரடியாக இடம்மாற்றம் செய்துள்ளது.
தமிழக அரசின் 42வது தலைமைச் செயலராக கடந்த மார்ச் மாதம் மாதம் மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார். இன்று அவர் மாற்றப்பட்டு அண்ணா குடிமையியல் பயிற்சி மையத்துக்கு (ஐ.ஏ.எஸ் அகாடமி) மாற்றப்பட்டுள்ளார்.
புதிய தலைமைச் செயலரான ஞானதேசிகன் தமிழக மின்வாரியத்தின் தலைவராக இருந்தவர். தற்போது மின்வாரியத்தின் புதிய தலைவராக சாய்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக இருந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்., பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலாளராகவும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலராக இருந்த என்.எஸ்.பழனியப்பன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராகவும் நகர்ப்புற திட்ட துறை ஆணையர் ஆர்.வெங்கடேசன், வருவாய்த்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக இருந்த நசீமுதீன், உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலராகவும் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மோகன் பியாரே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சி.மனோகரன் ஐ.ஏ.எஸ்., வேளாண் விற்பனைத் துறை இயக்குநராகவும் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்., தமிழக கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறு தொழில் கூட்டமைப்பு, டான்சி தலைவராக நிர்மலா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின்னர் நிர்வாக ரீதியாக மேற்கொண்ட முதலாவது மிகப் பெரிய அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications