ஆடுகளைத் திருடி கசாப்புக் கடை வைத்து கல்லாக் கட்டிய ஜெகஜ்ஜால திருடர்கள்!
கரூர்: கரூரில் ஆடுகளைத் திருடி கசாப்புக் கடை நடத்தி வந்த இருவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள மண்மாரி புதுகாட்டூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாயம் செய்து வரும் இவரது தோட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார்.

திங்கள்கிழமை இரவு 6 ஆடுகளை ஒரு நபர் பிடித்து செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு பகுதியில் ஆடுகளை திருடிச்செல்வது தெரியவந்தது. மேலும், பொதுமக்கள் அவரை பிடித்து வைத்துக்கொண்டு அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அரவக்குறிச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சேர்வை அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார். இதில், இவர் அரவக்குறிச்சியை அடுத்துள்ள சின்ன தொப்பாரபட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் சுரேஷ்குமார் என்றும், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆடுகளை திருடி, பள்ளபட்டி புதுசாயுபு தெருவில் கறிக்கடை வைத்துள்ள அன்வர் அலி என்பவரிடம் கொடுப்பதும் பிறகு இருவரும் சேர்ந்து பணத்தை பங்கிட்டுக்கொள்வதும் தெரியவந்தது.
விவசாயிகளின் பட்டியில் ஆடு திருடிய சுரேஷ்குமாரையும், அவர் திருடி வரும் ஆடுகளை வெட்டி கறியாக்கி விற்பனை செய்து வந்த அன்வர் அலி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இதுவரை எந்தெந்த ஊர்களில் ஆடுதிருடியுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications