ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 9 பேரும் விடுதலை.. அரசுத் தரப்பு மீது கோர்ட் சரமாரி குற்றச்சாட்டு!
Recommended Video

கோபிச்செட்டிப்பாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் கோபிச்செட்டிப்பாளையம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி இன்று அதிரடியாக விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தனது பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2000ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் கடத்தி சென்றார். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் 108 நாட்கள் கழித்து, ராஜ்குமார் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார்.

என்கவுண்டர்கள்
இந்த வழக்கு கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்தது. ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீசார் என்கவுன்ட்ர் செய்யப்பட்டு இறந்துவிட்டனர். அதேபோல மல்லு என்பவர் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.
[என் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.. வேட்பாளர்கள் விளம்பரம் கொடுக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு]

இன்று காலை ஆஜர்
ரமேஷ் என்பவர் இன்னமும் தலைமறைவாகவே உள்ளார். மீதமுள்ள 9 பேரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 47 பேர் இதுவரை சாட்சியம் அளித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17-ந் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 25-ந் தேதி அதாவது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மணி அறிவித்திருந்தார். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆஜராகும்படியும் நீதிபதி மணி உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி சரமாரி கேள்விகள்
அதன்படி இன்று காலை அன்றில் என்கிற ஏழுமலை, பசுவண்ணா, செல்வம் என்கிற சத்யா, அமிர்தலிங்கம், நாகராஜ், கல்மண்டிராமன், மாறன், கோவிந்தராஜ் ஆகிய 8 பேர் நீதிபதி முன்பு இன்று நிறுத்தப்பட்டனர். புட்டுச்சாமி ஆஜராகவில்லை. அப்போது இந்த வழக்கு குறித்து நீதிபதி மணி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

நம்பும்படியாக இல்லை
பர்வதம்மாள் ஏன் சாட்சியம் அளிக்கவில்லை என்றும், அன்றைய காலங்களில் அவர் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேட்டார். ராஜ்குமார், பர்வதம்மாள் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் எதிரான சாட்சியங்களும் நம்பும்படியாக இல்லை என்றும் இந்த வழக்கில் ஏகப்பட்ட குழப்பங்கள், தவறுகள் உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

அனைவரும் விடுதலை
வேறு வழக்கில் பிடிபட்ட துப்பாக்கிகளை இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, இது சம்பந்தமான விசாரணையும் சரியாக நடக்கவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். 9 பேரையும் விடுவிக்கப்பட்டதை அடுத்து 18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்ற வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது,.

போலீசார் குவிப்பு
மிக முக்கியமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதால், கோபி நீதிமன்றம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக காலை 9 மணிக்கு முன்னதாகவே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் தீர்ப்பு வரும்வரை அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications