”அம்மா” நீயே துணை- ஜெ. மீண்டும் முதல்வராக மண்சோறு சாப்பிட்ட அமைச்சர் கோகுல இந்திரா
சென்னை: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா சென்னையில் இன்று மண்சோறு சாப்பிட்டு வேண்டிக் கொண்டார்.
கடந்த நாட்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நீடூழி வாழ வேண்டியும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டியும், அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் அண்ணா நகரில் உள்ள அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் தீச்சட்டி எடுத்து வழிபட்டனர்.

இந்நிலையில், இன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா சென்னை அசோக் நகர் பிடாரி காளியம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டார். அவருடன் கூடவே அதிமுக பெண் தொண்டர்களும், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரும் மண் சோறு சாப்பிட்டு வேண்டிக்கொண்டனர்.
ஏற்கனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, அவரது விடுதலைக்காக தீச்சட்டி எடுத்தார் கோகுல இந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்காக தீக்குளித்தல், தற்கொலை செய்து கொள்வது ஆகியவற்றை தாண்டி அங்கப்பிரதட்சணம், மண்சோறு, பால்குடம் எடுத்தல் என்று அதிமுக தொண்டர்கள் ஆன்மிக வழியினையே பெருமளவில் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications