குக்கருக்குள் வைத்து 3 கிலோ தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 4பேர் சிக்கினர்
சென்னை: குக்கருக்குள் வைத்து, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 4.2 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வந்த விமான பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் ஸ்கேன் செய்து பார்த்தபோது, சமையல் குக்கர் ஒன்றிற்குள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
குக்கருக்குள் அறைபோன்ற பகுதியை உருவாக்கி அதற்குள் தங்கம் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 3 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் பண மதிப்பு ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
தங்கத்தை கடத்தி வந்த, சென்னையை சேர்ந்த பீர் முகமது, நைனா முகமது, பஷீர் கான், குரேஷி ஆகியோர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றாவது நகரும் சுமைதூக்கி அருகில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் தங்கத்தை கொண்டு வந்தது யார் என்று கண்டுபிடிக்க, விமான நிலைய சிசிடிவி காட்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியை தாண்டும் என்று சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.