டெல்டா விவசாயிகள் மனம் குளிர குளிர.. கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் நேரு!
திருச்சி: குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இன்று தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி எனும் முப்போக நெல் சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறந்து திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மாயனூர் கடந்து முக்கொம்பை அடைந்து கல்லணைக்கு நேற்று இரவு வந்தடைந்தது. அந்த நீரை வரவேற்கும் விதமாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காவிரி தண்ணீருக்கு மலர்கள், விதை நெல் மணிகளை தூவி வரவேற்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றிற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று அமைச்சர் கே.என்.நேரு குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். விதை நெல், பூக்களைத் தூவி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கல்லணையில் தண்ணீர் திறப்பையொட்டி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது. ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் குறுவை சாகுபதிக்கு பாசன வசதி பெறும் என்றும் சம்பா, தாளடி ஆகிவற்றையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications