மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழக அரசு கேட்பதை செய்து தர மோடி 'ரெடி' : முதல்வர் எடப்பாடி
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழக அரசு கேட்பதைச் செய்து தர மோடி தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் : மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருப்பதால்தான் தமிழக அரசு கேட்பதைச் செய்து தர பிரதமர் மோடி தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகரங்களை இணைக்கவும், தொழில் வளர்சிக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு 1499 ரூபாய்க்கு 50 நிமிடத்தில் பயணிக்க முடியும்.
இந்த திட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் ஏற்படுத்தும். இதன் மூலம் ஏழை எளிய மக்களும் விமான சேவையைப் பயன்படுத்த முடியும்.
தமிழகத்தில் விமான சேவைக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலத்திற்கு அடுத்தபடியாக நெய்வேலியில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி, திருச்சி, சென்னை விமானநிலையங்களும் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சேலம் சென்னை இடையே பசுமை வழிச்சாலை செயல்படுத்தபடவுள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும்.
அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக்கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொடியசைக்க சேலத்தில் இருந்து முதல் விமானம் சென்னை புறப்பட்டுச் சென்றது.