கூர்க்காலாந்து கேட்டு சென்னையில் கூர்க்கா இன மக்கள் பேரணி
கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி, மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்.
சென்னை: கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி, மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் காலவரையற்ற போராட்டம் பல வாரங்களாக நீடிக்கிறது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தியும், வங்கமொழி திணிப்பை எதிர்த்தும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தொடர்ந்து பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகிலிருந்து பாந்தியன் சாலைவரை கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வாழ் கூர்க்கா இன மக்கள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கூர்க்காலாந்து கேட்டு முழக்கங்கள் எழுப்பினர். மேலும் டார்ஜிலிங்கில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கும் பேரணியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் வசித்து வரும் கூர்க்காலாந்து மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் வழங்கக் கோரி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் , போராட்டத்தில் வங்க மொழி திணிப்பிற்கு எதிரான முழக்கங்களையும் கூர்க்கா இனமக்கள் எழுப்பினர்.
ஏற்கெனவே அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் சென்னையில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், எங்கள் மக்கள் மீது மேற்குவங்க மாநில போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு நாங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். எங்களுக்கு கூர்க்காலாந்து வேண்டும். நாங்கள் மீண்டும் அங்கே போக முடியாத நிலை உள்ளது. வாழ முடியாத சூழலை வங்க அரசு உண்டாக்கியுள்ளது. போக்குவரத்து இல்லை, இண்டர்நெட் வசதியை நிறுத்திவிட்டர்கள். அதனால் நாங்கள் சென்னையில் பேரணி நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.
கூர்க்கா இன மக்கள் சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை போன்ற இடங்களிலும் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.