டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்.. பொதுமக்கள் ஓட்டம்
நெல்லை: நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து கடையம் அருகே திடீரென டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதால் பொதுமக்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை புளியரையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை சாமுவேல் சத்தியராஜ் ஓட்ட, கண்டரக்டராக பாலசுப்பிரமணியன் இருந்தார். அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இவர்களில் கல்லூரி மாணவ, மாணவிகளும் அடக்கம்.
இந்தப் பேருந்தானது கடையம் பேருந்து நிலையம் அருகே வடக்கு பஜாரில் வந்த போது திடீரென முன்பக்க வலபுறத்தில் உள்ள டயர் வெடித்தது. இதனால் பேருந்து கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பேருந்து ஒன்று தாறுமாறாக வருவதைப் பார்த்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் டிரைவர் கடுமையாக போராடி பேருந்தை நிறுத்தினார். டயர் வெடித்த பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி விடப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் இந்த வழித்தடத்தில் தான் புதிய பேருந்தை இயங்கி வைத்தார். அது சுமார் 1 வார காலம் மட்டுமே ஓடியது. பின்னர் அதை வேறு வழித்தடத்தில் மாற்றி விட்டுவிட்டு, இந்த வழித்தடத்தில் பழைய பேருந்தை இயக்கியுள்ளது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.