"தமிழ் மொழியால் ஹிந்திக்கு வளம் சேர்க்க முடியும்".. என்ன சொல்ல வருகிறார் மோடி?
அரசு அதிகாரிகள் ஹிந்தியில் பேச வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
சென்னை: "தமிழ் மொழியால் இந்திக்கு வளம் சேர்க்க முடியும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று சொன்ன அதே மோடிதான் இப்போது அதிகாரிகள் எல்லாரும் ஹிந்தியில்தான் பேச வேண்டும் என்று சொல்கிறார். டெல்லியில் மத்திய ஹிந்தி கமிட்டியின் 31-வது கூட்டத்திற்கு தலைமையேற்ற மோடி இவ்வாறு பேசியுள்ளார். அவர் பேசிய விவரம் என்னவென்றால்:
தூய ஹிந்தி வேணாம்
''சிக்கலான தொழில்நுட்ப வார்த்தைகளை எல்லாம் இந்தியில் பேச முயற்சிக்க வேணாம். அப்படி பேசினால் ஹிந்தி மொழி நிச்சயம் மக்களை போய் சேராது. அதேமாதிரி சுத்தமான ஹிந்தியில்தான் பேசணும்னு மட்டும் நினைச்சிடாதீங்க. அதுவும் மக்களை போய் சேராது. அதனால் மக்கள் பயன்பாட்டில் கலந்துள்ள மொழியைத்தான் பயன்படுத்தணும்.
இடைவெளி குறையும்
அதிகாரிகள் தங்களது அன்றாட உரையாடல் மூலம் ஹிந்தியை பரப்ப வேண்டும். மொத்தத்தில் அரசுத்துறைகளிலும், சமூகத்திலும் ஹிந்தி மொழி பயன்படுத்தப்படும் முறைகளில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அவ்வளவுதான்.
இந்திக்கு வளம்
ஹிந்தியை பரப்ப கல்வி நிறுவனங்களும் உதவ வேண்டும். உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் என்பதில் இந்தியர்கள் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஹிந்திக்கு வளம் சேர்க்க உதவும்'' என்று மோடி பேசினார்.
திணிப்பது எதற்கோ?
அது சரி... தமிழ்மொழி எப்படி ஹிந்திக்கு வளம் சேர்க்க முடியும்? ஹிந்தியில் தமிழைத் திணிக்கும்... அல்லது தமிழில் ஹிந்தியைத் திணிக்கும் வேலைகள் எதற்கோ?