பெண் நிருபர் கன்னத்தில் தட்டிய விவகாரம்: மன்னிப்பு கேட்டார் ஆளுநர்
பெண் நிருபர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார்.
Recommended Video
சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அதில் காவிரி விவகாரம் சூரப்பா நியமனம், பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட விவகாரங்கள் எழுப்பப்பட்டன.
பெண் கோபம்
இந்த நிலையில் பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த பெண்ணின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அந்த பெண் நிருபர் கோபம் அடைந்தார்.
டுவிட்டரில்
ஒரு பொது இடத்தில் அறிமுகம் இல்லாத ஒருவர் என் கன்னத்தில் தட்டியதால் தான் மிகவும் ஆத்திரத்துடனும் மன வருத்தத்துடனும் இருப்பதாகவும் ஆளுநர் தட்டிய கன்னத்தை பல முறை தண்ணீர் போட்டு கழுவியதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கோரிக்கை
இந்நிலையில் தவறான எண்ணம் இல்லாதபோதிலும் பொது இடத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் பெண் கன்னத்தில் தட்டியது தவறு என்றும் ஆளுநரை பதவி விலக கோர வேண்டும் என்றும் கனிமொழி, ஸ்டாலின், வேல்முருகன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
40 ஆண்டுகளாக
இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் அந்த பெண் நிருபருக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது பேத்தி போல் இருந்ததால்தான் கன்னத்தில் தட்டினேன். 40 ஆண்டுகளாக நானும் பத்திரிகைத் துறையில் இருந்திருக்கிறேன்.
மன்னிப்பு
நீங்கள் கேட்ட கேள்வியை பாராட்டும் விதமாகவே தட்டினேன். நான் கன்னத்தில் தட்டியதால் நீங்கள் மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்திருந்தீர்கள். உங்கள் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக நான் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடிதத்தை ஏற்று உரிய முறையில் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன் என்று ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.