நெல்லை கல்லூரியில் கிராமிய கலை விழிப்புணர்வு போட்டி
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் "கிராமியம்-2013' என்ற கலைப்போட்டிகள் நாளை (25ம் தேதி) துவங்குகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளிடையே கிராமிய கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கிராமிய கலைகளை பாதுகாக்கும் வகையிலும் பாளை. சேவியர் கல்லூரியில் இயங்கும் நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் "கிராமியம்' போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இந்தாண்டு மீண்டும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகள் நாளை (25ம் தேதி) துவங்குகின்றன. காலை 9 மணிக்கு துவங்கும் போட்டியை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு துவக்கி வைக்கிறார்.
கிராமிய மனம் வீசும் வகையில் குழு நடனம், மாறுவேட போட்டி, கதை சொல்லல், குழு நடனம், குழு பாடல், குறு நாடகம் உட்பட 17 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகள் 1-3 வகுப்பு, 4-5, 6-8, 9-10, 11-12 வகுப்பு என ஐந்து பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.போட்டிகள் 26ம் தேதி மாலை வரை நடக்கிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.
1-5ம் வகுப்பு வரை அதிக புள்ளிகள் பெறும் பள்ளிக்கு வானமாமலை சுழற்கேடயமும், 6-12 வகுப்பு வரை அதிக புள்ளிகள் பெறும் பள்ளிக்கு லூர்து சுழற்கேடயமும் பரிசாக வழங்கப்படும்.
பரிசளிப்பு விழாவில் கலைமனைகளின் அதிபர் டேனிஸ் பொன்னையா அடிகள், கல்லூரி செயலர் மைக்கேல் தாஸ் அடிகள், முதல்வர் கில்பர்ட் கமிலஸ் அடிகள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications