கிரானைட் முறைகேடு: சகாயம் குழுவின் 8 கட்ட விசாரணையை நிறைவு- மார்ச் 12ல் அறிக்கை தயாராகுமா?
சென்னை: கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழுவினரின் 8வது கட்ட விசாரணை நிறைவடைந்தது. மின்சாரத்துறை, வேளாண்துறை, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கிரானைட் முறைகேடு குறித்து 7 கட்ட விசாரணைகள் நடத்தியுள்ள சகாயம் குழுவினர் கடந்த மாதம் 27-ஆம் தேதி 8 கட்ட விசாரணையை தொடங்கினர். ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொண்டதோடு ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டது. கடைசி நாளான இன்று, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் சகாயம் விசாரணை மேற்கொண்டார்.

8-வது கட்ட விசாரணையின் போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக சுங்கம், கலால், காவல், பொதுப்பணி, கனிமவளம் உள்ளிட்ட 28 துறைக்கு விளக்கம் கேட்டு சகாயம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதற்கு மின்துறை, வேளாண், காவல்துறை, பத்திர பதிவுத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து விளக்கமளித்தனர். எஞ்சிய துறையினர் கூடுதல் அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேபோல், தனியார் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 15 வங்கிகளிடம் இருந்து கிரானைட் குவாரி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் பற்றிய கணக்கு விவரங்களைக் கோரியிருந்தார் சகாயம். 8-க்கும் மேற்பட்ட வங்கிகள் அதுதொடர்பான விவரங்களை சகாயம் குழுவினரிடம் அளித்திருந்தனர். பிற வங்கிகள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளன.
மார்ச் 12ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல துறைகளில் இருந்து விளக்கம் வராததால் அறிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால அவகாசத்தை நீடிக்க சகாயம் குழு நீதிமன்றத்தில் முறையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications