குரூப் – 2 தேர்விற்கான விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்-2 தேர்விற்கான சரியான விடைகள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று, குரூப்-2 "அ" பிரிவிற்கான தேர்வினை நடத்தியது. இதன் மூலம் தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள உதவியாளர், கணக்கர் போன்ற 2,846 பதவிகளுக்கான இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
இதற்காக மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் 2,217 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். விண்ணப்பம் செய்தவர்களில் சுமார் 2 லட்சத்து 8782 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்நிலையில் குரூப் -2 "அ" எழுத்து தேர்வுக்கான விடைகள் தற்போது தேர்வர்களின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகியவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் வருகிற 10 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சிக்கு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேற்விற்கான முடிவுகள் 3 மாதகாலத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்ற குரூப்-2 தேர்விற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.