குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு... பெரம்பலூரில் இன்று தொடக்கம்
பெரம்பலூர்: குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று முதல் தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2015- 2016 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையில் 2016 ஜூலை 3-வது வாரத்தில் தொகுதி 4-ல் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4,931 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கத்தில் குரூப்- 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஜுன் 10-ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் தொடங்குகிறது.
இந்த பயிற்சி அரங்கமானது 120 நபர்கள் அமரக்கூடிய இருக்கை, ஒலி, ஒளி அமைப்பு, பட வீழ்த்தி மற்றும் மடிக்கணிணி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களுடன் கூடிய நூலக வசதியும் மேற்கொள்ளப்படுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுயவிவர குறிப்பு மற்றும் மொபைல் நம்பர் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.