என்னது த.மா.கா.வில் கோஷ்டி பூசலா?: ஜி.கே. வாசன் விளக்கம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சயில் கோஷ்டி பூசல் எல்லாம் இல்லை என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த துணை தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை. மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்பில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் தான் செயற்குழு கூட்டத்திற்கு அவர்கள் வரவில்லை என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் சனிக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து ஜி.கே. வாசன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

டிராபிக் ராமசாமி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினால் அவர் ஆதரிப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இடைத்தேர்தல்
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது. எங்களின் இலக்கு சட்டசபை தேர்தல் தானே தவிர இடைத்தேர்தல் இல்லை. இடைத்தேர்தலில் எங்களின் நிலைப்பாடு பற்றி 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடுவோம் என்கிறார் வாசன்.

நிர்வாகிகள்
சென்னை மற்றும் கன்னியாகுமரிக்கான நிர்வாகிகள் சில நாட்களில் அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் மாவட்ட பகுதிகளில் நிர்வாகிகளை நியமித்துவிட்டு சட்டசபை தேர்தலுக்கான பணியில் இறங்குவோம். நான் மாவட்டம் மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

கோஷ்டி பூசல்
செயற்குழு கூட்டத்தில் மூத்த துணை தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கலந்து கொள்ளவில்லை. அப்படி என்றால் கட்சியில் கோஷ்டி பூசல் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு வாசன் கூறுகையில், கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை சந்தித்து அதற்கான விளக்கத்தை அளித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications