குருப்பெயர்ச்சி விழா: திட்டை குரு ஸ்தலத்தில் சிறப்பு ஏற்பாடுகள்!
தஞ்சாவூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை குரு பகவான் திருத்தலத்தில் பந்தக்கால் விழா உடன் திருவிழா தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி குரு பெயர்ச்சி விழா இங்கு சிறப்பாக நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித் திட்டை என்று சொல்லப்படும் திட்டை திருத்தலம். இங்கே உள்ள மூர்த்தியின் திருநாமம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்ட திருத்தலம் இது. முருகப்பெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா, உமையவள் என தெய்வங்களும் மகாமுனிவர்களும் வழிபட்ட புண்ணியபூமி என்கிறது ஸ்தல புராணம்!

தேவர்களின் குருவான பிரகஸ்பதி இங்கு வந்து சிவவழிபாடு செய்து தவம் இருந்ததால், நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவானாக அருளும் வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றார். எனவே இங்கே குருபகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்து உள்ளது.
ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி நாளிலும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளிலும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகளும் பரிகாரங்களும் நடைபெறுவது வழக்கம். வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று குருப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய நாளில், பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசிப்பார்கள். பரிகாரங்கள் செய்வார்கள். விசேஷ ஹோமம் முதலான சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறும். இதற்கான பந்தக்கால் நடும் விழா, நேற்று 21ம் தேதி காலையில் நடைபெற்றது. இதையடுத்து விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் செய்து வருகின்றனர்.
திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார்.
யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள்.
இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான் என்கின்றது புராணம்.
அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நிதி கொண்டு காட்சி தருகின்றார்.
பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார்.
இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.
இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.












Click it and Unblock the Notifications