குட்கா முறைகேடு: மாஜி காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் ஆவணங்கள் சிக்கின!
குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
தமிழகத்தில் செய்யப்பட்ட குட்கா ஊழல் தற்போது இந்தியாவின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. நேற்று இது தொடர்பாக சிபிஐ அதிகரிக்க இந்தியா முழுக்க அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆம் இந்தியா முழுக்கதான்.
பெங்களூர், மும்பை, ஹைதராபாத், தமிழ்நாட்டில் 30க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது. இது வருமான வரி சோதனை இல்லை, சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனை.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, இதேபோல பாண்டிச்சேரி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடந்தது.
அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.
இந்த நிலையில் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் இரவு முழுக்க சோதனை நடந்தது. அவர் வீட்டில் மட்டும் இரவு முழுக்க 50க்கும் அதிகமான சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தற்போது இந்த சோதனை நிறைவடைந்துள்ளது. இரவு முழுக்க நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தற்போது இந்த ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சோதனை சுமார் 20 மணி நேரம் நடந்துள்ளது. விரைவில் இதில் சில முக்கிய புள்ளிகள் கைதாக வாய்ப்புள்ளது.