பிரதமர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. ஹெச் ராஜா வலியுறுத்தல்
பிரதமர் கட்டடப்பஞ்சாயத்து செய்வதாக ஸ்டாலின் கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரதமர் கட்டடப்பஞ்சாயத்து செய்வதாக ஸ்டாலின் கூறியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்து இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதனையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் மூன்றாண்டு சாதனை மலராக வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பாஜகவின் சாதனை மலர் வெளியிடப்பட்டது.
பாஜக ஸ்டிக்கர்
இதனைத்தொடர்ந்து பாஜக ஸ்டிக்கரும் வெளியிடப்பட்டது. இதனை ஹெச்.ராஜா வெளியிட தமிழிசை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாஜக சிறப்பு இணையதளம், சென்னையில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்டாலின் மன்னிப்பு கேட்கனும்
இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் கட்ட பஞ்சாயத்து செய்வதாக கூறியதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என் அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் கனவில் இருந்தவர்
முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தவர் ஸ்டாலின். தற்போது விரக்தியடைந்துள்ளார். ஆகையால்தான் அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.
தமிழிசை கண்டனம்
அதிமுகவின் இரு அணிகளையும் பிரித்துவிட்டு தற்போது அதனை சேர்த்து வைக்க பிரதமர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக ஸ்டாலின் கூறியதற்கு ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹெச் ராஜா ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.