வர வர எச்.ராஜா "கொச்சை" ராஜாவா மாறிட்டு வர்றாரே.. தடுத்து நிறுத்த யாருமே இல்லையா!
எச்.ராஜாவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு: எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, மற்றும் பதிவுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் எப்போதுமே போராடுவார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் தற்போது ஒரு அரசுத் துறையே மொத்தமாக எழுந்து போராட்டத்தில் குதித்துள்ளது அதிர வைத்துள்ளது.
வேடசந்தூரில் நடந்த இந்து முன்னணி கூட்டத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்களை தரகுறைவாக திட்டியதோடு அவர்களின் வீட்டு பெண்களையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பெண்களை விற்பார்கள்
அதாவது, அறநிலையத்துறையில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு கோயில் நிலங்களை விற்றுவிடுகிறார்கள். இப்படி லஞ்சம் வாங்குவதற்கு தங்கள் வீட்டு பெண்களை கூட அடுத்தவர்களிடம் விற்க தயங்க மாட்டார்கள் என்று கொச்சையின் உச்சத்திற்கே போய் பேசியிருக்கிறார் எச்.ராஜா.

கைது செய்ய வேண்டும்
இப்படி இந்து சமய அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளதற்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்லோரது ஒட்டுமொத்த கோரிக்கையும் பெண்களை இழிவாக பேசிய ராஜாவை கைது செய்ய வேண்டும் என்பதுதான். அப்படி ராஜாவை கைது செய்யாவிட்டால், அதுவரை நாங்கள் வேலைக்கு செல்லமாட்டோம் என்றும் உறுதியாக கூறினர்.

நல்ல பெயர் இல்லை
மக்களிடம் எப்போதுமே எச்.ராஜாவுக்கு நல்ல பெயர் கிடையாது. எதையாவது பேசி நானும் கச்சேரியில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதே இவரது வேலையாக மாறி விட்டது. இந்த புகைச்சல் போன வருடத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது. "இந்து அறநிலையத்துறையில் ஊழல் மலிந்து கிடக்கிறது. முறையான பராமரிப்புகள் இருப்பதில்லை. வக்பு வாரியம் போன்ற தனி வாரியம் அமைத்து இந்துக் கோவில்களைப் பாராமரித்தால்தான் இனி கோவில்களைப் பராமரிக்க முடியும்" என்று சில மாதங்களாகவே எச்.ராஜா பேசி வந்தார்.

அரசியல் ஆதாயம்
இதனால் துறை ரீதியாக அனைவருமே ராஜாவின் பேச்சினால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். ஆனால் இப்போது துறையில் வேலை பார்க்கும் பெண்களை பேசியதும், அடக்கி வைத்த ஆத்திரம் தமிழகம் முழுவதும் வெடித்து கிளம்பியுள்ளது. ராஜாவின் பேச்சு எப்போதுமே தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக இருக்கும். அப்படி சீர்குலைத்து அதில் எப்போதுமே அரசியல் ஆதாயம் தேடுவதுதான் இவரது வாடிக்கை.

கைது செய்யப்படுவாரா?
இப்போது தன் மதத்தினர் என்று இல்லாமல் ஒரு அரசு துறையை சார்ந்தவர்களை பேசுகிறோமே, அதிலும் அங்கு பணிபுரியும் பெண்களை தவறாக பேசுகிறோமே என்றுகூட ராஜாவுக்கு தெரியவில்லை. இனி எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோதான் அறநிலையதுறை ஓரளவு சமாதானமாகும் என தெரிகிறது.

நோ ரியாக்ஷன்
எங்கே.. அரசையே திட்டிப் பேசியுள்ளார் எச்.ராஜா. அதற்கு அரசாங்கமே ரியாக்ஷன் காட்டாமல் உள்ளது.. அறநிலையத்துறை மட்டும் தனியாக என்ன செய்து விட முடியும். "காவல்துறையைப் பார்த்து கம்முன்னு இருக்க கத்துக்கங்க" என்று அறநிலையத்துறைக்கு அறிவுரைதான் வழங்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications