ஈஷா மையத்தின் மீதான அவதூறுகளுக்கு பின்னால் மதமாற்ற சக்திகள்: ஹெச். ராஜா திடுக் புகார்
கோவை: ஈஷா யோகா மையத்தின் மீதான அவதூறுகளுக்குப் பின்னால் மதமாற்ற சக்திகள் இருப்பதாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா திடுக்கிடும் புகாரைத் தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் தங்களது 2 இளம்பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கோவை ஆட்சியரிடம் புகார் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஈஷா யோகா மையம் மீது ஏராளமான புகார்களைக் கூறி வருகின்றனர்.
ஈஷா யோகா மைய முறைகேடுகள் தொடர்பாக சகாயம் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவை நீதிபதி பொங்கியப்பன் நேற்று ஈஷா யோகா மையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது திடீரென பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவும் அங்கே செல்ல சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, ஈஷா யோகா மையம் மீதான புகார்களின் பின்னணியில் மதமாற்று சக்திகளே உள்ளன. இந்து மத நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் வரும்போது இந்துக்கள் வீதிகளுக்கு இறங்கி வர வேண்டும்.
ஈஷா மையத்துக்கு எதிராக பெற்றோரை தூண்டிவிட்டதில் மாற்று மத சக்திகளின் சதி இருக்கிறது என்றார்.