அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வரவேற்கிறேன்.. சொல்வது எச்.ராஜா.. அதுக்கு காரணம் இருக்கு! என்னாச்சு?
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்கு வருவதற்கு அவரே வழிவகை செய்துவிட்டார் என்று கூறியுள்ளார் எச். ராஜா.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. திமுக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, டி ஆர் பாலு , ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், கவுதம் சிகாமணி உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.

அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியல் போலியானவை என்று திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவதூறு பரப்பிய அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி கேட்கவில்லை என்றால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பினார். இதேபோன்று உதயநிதி ஸ்டாலின் கனிமொழி உள்ளிட்டோரும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
ஆனால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது, அபராத தொகையும் வழங்க முடியாது. நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை. அதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் இல்லை என்று அவர்கள் நினைத்தால் வழக்கு தொடரட்டும். நான் நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன் என்று பதில் அளித்திருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என அவதூறு வழக்கில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வரவேற்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அளித்துள்ள பேட்டியில், "அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஆதாரம் இல்லாமல் அவர் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார்.
முதல்வர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே ஐந்து நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்துள்ளனர். முதல்வரே இந்த வழக்கு கொடுத்திருக்கும் நடவடிக்கையின் மூலமாக அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வருவதற்கு அவரே வழிவகை செய்திருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications