நல்லவேளை.... விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரலை... மு.க. ஸ்டாலின் 'நிம்மதி'
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்களது கூட்டணிக்கு வராமல் இருந்ததே நிம்மதியாக இருக்கிறது என்று திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் களத்தில் விஜயகாந்த் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் 'காமெடி டைமாக'த்தான் இருக்கிறது. விஜயகாந்த் பேசுவதென்னவோ சிறிது நேரம்தான்.. அந்த சிறிது நேரம் பேச்சும் புரிந்து கொள்ளமுடியாதவகையில் கோர்வையாக இருக்காது.
அதே நேரத்தில் பெரும் பகுதி நேரம் தொண்டர்களை ஒருமையில் திட்டுவது, நாக்கை துருத்தி அடிக்க கை ஓங்குவது என்றெல்லாம் செய்துவிட்டு நான் மனதில்பட்டதைத்தான் பேசுவேன் என வியாக்யானம் தருவது என்பது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்த் குறித்து மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
நல்ல வேளை விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையவில்லை. இப்போது தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் குறித்து வரும் செய்திகளும், விமர்சனங்களையும் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு வேளை அவர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருந்தால் அவரது செயல்களுக்கு எல்லாம் நாங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்திருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.