சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் அறிவிப்பு
சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: போரூர் அருகே மாதா நகரில் அடுக்குமாடு குடியிருப்பில் வசித்து வரும் பாபு-ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஹாசினி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி அறிவித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி கேட்டு ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வந்த மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஹாசினி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து மாங்காடு போலீசில் புகார் செய்தனர். அடுக்கு மாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சிறுமி ஹாசினி மாலை 6.30 மணிக்கு வீட்டுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. அதன் பின்னர் தான் அவள் மாயமாகி இருந்தாள்.
இதையடுத்து போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மற்றொரு கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இரவு 9.30 மணிக்கு ஒரு வாலிபர் பையுடன் வெளியே செல்வதும், ஒரு மணி நேரம் கழித்து அதே வாலிபர் பை இல்லாமல் குடியிருப்புக்குள் செல்வதும் பதிவாகி இருந்தது.
அந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரித்த போது அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்பது தெரியவந்தது. இவர் மயிலாப்பூரில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் தான் திருமணத்துக்கு சென்றதாக கூறினார். அவரது வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருக்கவே சிறுமியை கடத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, போரூர் அடுத்த மாதா நகரைச் சேர்ந்த மக்கள், சிறுமியை கொலை செய்த காம கொடூரனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அவருக்கு ஆதரவாக எந்தவொரு வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது. மேலும், அவருக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஹாசினிக்கு நடந்த கொடுமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன் பின் சிறுமி ஹாசினியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 3 லட்சம் வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
ஆலோசனைக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரண உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் ஓபிஎஸ், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications