எங்க வந்து யாரு கிட்ட... செருப்பு பிஞ்சிரும் - சத்தியமூர்த்தி பவனில் ஆபாச சண்டை
சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டையில் நா கூசும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அர்ச்சனை செய்து கொண்டனர்.
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அணியினர் ஒருவரை ஒருவர் தாக்கி, ஆபாச வார்த்தைகளினால் அர்ச்சனை செய்து சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிரணி நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் அல்லாத பெண்களும் மற்றும் ஆண்களும் வந்திருந்தனர்.

ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மகளிரணி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதோடு, ஆபாச வார்த்தையில் திட்டிக்கொண்டனர். மகளிரணியினருடன் வந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமானது.
சண்டைக்கு காரணம் ஹசீனாவின் படத்தை போஸ்டரில் போடவில்லை என்பதுதானாம். பெண்களின் சண்டையில் ஆண்களும் உள்ளே புகுந்ததுதான் மகளிரணி தலைவி ஜான்சிராணியின் கொந்தளிப்புக்கு காரணமாகிவிட்டது.
ஹசீனாவின் கணவரை ஜான்சிராணியும், கௌரியும் பிடிபிடியென பிடிக்க, அதற்கு ஹசீனாவின் கணவரே ஓங்கி ஓர் உதை விட்டார். ஏய் என்னடி என்று கேட்டுக்கொண்டே ஆபாச வார்த்தையில் ஜான்சிராணியை திட்டிக்கொண்டே தாக்கினார்.
அதற்கு ஜான்சிராணியோ, ஏய் எங்க வந்து யாரு கிட்ட... செருப்பு பிஞ்சிரும் என்று கத்திக்கொண்டே ஹசீனாவின் கணவரை விரட்டினார். மொத்தத்தில் சத்தியமூர்த்தி பவன் சண்டைபவனானது. சண்டைக்காட்சிகள் லைவ் வீடியோவாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பானது.












Click it and Unblock the Notifications