பெரியகுளம் டெக்னிக்கை கையில் எடுத்த தினகரன்... ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு மட்டன், சிக்கன் கவனிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு மட்டன், சிக்கன் வாங்கிக் கொடுத்து கவர்ந்து வருகிறார்களாம் தினகரன் ஆதரவாளர்கள்.
சென்னை: ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பணம், பரிசு கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்தாலும் அரசியல் கட்சியினர், மட்டன், சிக்கன், பெட்ரோ கார்டு, செல்போன் டாப் அப் என மறைமுகமாக பணம் கொடுத்து அசத்தி வருகின்றனர். பெரியகுளத்தில் ஜெயிக்க மேற்கொண்ட டெக்னிக்கை ஆர்.கே. நகரில் கையாண்டு வருகிறாராம் டிடிவி தினகரன்.
ஆர்.கே. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 6 தினங்கள் மட்டுமே உள்ளதால் பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது.
தலைக்கு 500 ரூபாய், பிரியாணி பொட்டலம் என பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு கவனிப்பு இருப்பதால் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலரும் ஆர்.கே. நகரில் ஆஜராகி விடுகின்றனர்.
கைமாறும் பணம்
ஆர்.கே. நகரில் வாக்காளர்கள் காட்டில் பணமழைதானாம். என்னதான் கண் கொத்தி பாம்பாக கண்காணித்தாலும் மறைமுகமாக பணம் ஏதாவது ஒருவகையில் கைமாறி விடுகிறது. அதிமுக இரு அணியாக பிரிந்துள்ளது யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ ஆர்.கே. நகர்வாசிகளுக்கு அத்தனை கொண்டாட்டமாக உள்ளது.
25 வாக்காளர்களுக்கு 2 நிர்வாகிகள்
டிடிவி தினகரன் பற்றிய சர்வேக்கள் கலவரமாக உள்ளதால் 25 வாக்காளர்களுக்கு 2 பிரதிநிதிகள் என பிரித்து கவனிக்கின்றனர். அந்த வாக்காளர்களை தினசரியும் கண்காணிப்பது மட்டுமே இவர்களின் வேலையாக உள்ளது.
எல்லாம் எக்சேஞ்ச்தான்
ஆர்.கே. நகரில் இப்போது எந்த வீட்டிலும் பழைய பொருட்களை பார்க்க முடியலையாம். எல்லாம் புத்தம் புதிதாக உள்ளதாம். காரணம் தொப்பிக்காரர்களாம். பழசா இருக்கா உடனே புதுசா எக்சேஞ்ச் பண்ணுங்க என்று கூறி மாற்றித் தருகிறார்களாம்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி
2 கிலோ ஆட்டுக்கறி, சிக்கன் என தினசரியும் கவனிப்பு அதிகரிக்கிறது. நாங்க வெளியூரு சமைச்சு கொடுங்க என்றுதான் கறியை கை மாற்றுகிறார்களாம். சமைத்த பின்னர் நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம், பிள்ளைங்களுக்கு கொடுத்திருங்க என்று கூறி சென்று விடுகிறார்களாம். இந்த அப்ரோச் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
பெரியகுளம் டெக்னிக்
பெரியகுளத்தில் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது இதே டெக்னிக்கைதான் கையாண்டார். அதே பாணியை ஆர்.கே. நகரில் செயல்படுத்த தொடங்கியுள்ளார். ஆனால் அப்போது நிர்வாகிகள் கொடுத்த ஒத்துழைப்பு இப்போது இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் பலரும் சொல்கிறார்கள். என்னதான் கவனித்தாலும் தொப்பிக்கு வாக்குகள் விழுமா? ஏப்ரல் 15ஆம் தேதி தெரியத்தானே போகிறது.