வைகோவுக்கு ஹேப்பி நியூஸ்... கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை இழுத்து மூட ஹைகோர்ட் கிளை உத்தரவு
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக் கடையை மூட வேண்டும் என வைகோ சகோதரர் நவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கலிங்கபட்டி ஊராட்சி தலைவர் வை.ரவிச்சந்திரன் ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கலிங்கபட்டியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கக்கூடாது என கடந்த 2002ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஊராட்சி தீர்மானத்தை மீறி கடை திறக்கப்பட்டது. இதனால் பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4ல் நடந்த ஊராட்சி கூட்டத்திலும் கடையை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனாலும் கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே நான் தொடர்ந்த வழக்கில், கலிங்கபட்டியில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்த ஊராட்சி தீர்மானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசீலிக்குமாறு ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டது. மறுநாள் என்னை அழைத்து கலெக்டர் விசாரித்தார். பின்னர் எங்களது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, நீதிமன்றம் தலையிட்டு ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் கடையை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இன்று மனு மீதானா விசாரணை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவால் கலிங்கப்பட்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி வைகோ, அவரது தாயார், நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது மிகப்பெரிய அளவில் போராட்டமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.