எஸ்.சி.வி. உரிமம் ரத்தை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிவு- நாளை மறுநாள் தீர்ப்பு!
சென்னை: சன் டிவி குழுமத்தின் எஸ்.சி.வி. கேபிள் ஒளிஅரப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் உத்தரவு பிறபிக்க வாய்ப்பிருக்கிறது என்று நீதிபதி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சன் டிவி குழுமத்தின் கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் எஸ்.சி.வி. நிறுவனம். இந்த எஸ்.சி.வி.தான் கேபிள் ஒளிபரப்பு தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இந்த எஸ்.சி.வி. நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை ஒளிபரப்பு உரிமங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை திடீரென ரத்து செய்து அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாததால் எஸ்.சி.வி. உரிமம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக கல் கேபிள்ஸ் கேபிள்ஸ் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத்குமார் கடந்த 27-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசின் நடவடிக்கை எடுக்கப்படும் முன் சட்டப்படி கொடுக்கப்படும் முன்னறிவிப்பு நோட்டீஸ் எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்கள் என்றால் அது என்னென்ன காரணங்கள் என்பதும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. எனவே, இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கல் கேபிள்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அப்போதுதான், எஸ்.சி.வி. முன்னர் செய்த கர்ம வினைகள் திரும்பவும் அப்படியே இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டது என்று நீதிபதி கூறினார்.
பின்னர் தங்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் என்ன பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமம் ரத்து செய்யப்பட்டது என்பதை விளக்கவும் மத்திய அரசு தரப்பு அவகாசம் கொடுத்திருந்தார் நீதிபதி.
இன்று மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. பின்னர் நீதிபதி ராமசுப்பிரமணியம், இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது. நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications