அனுமதியின்றி மனிதச் சங்கிலி.. ஆயிரக்கணக்கானோருடன் விஜயகாந்த், பிரேமலதா கைதாகி விடுதலை
சென்னை: போலீஸ் அனுமதியின்றி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த முயன்றதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேமுதிகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் கோயம்பேடு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி தேமுதிக சார்பில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை கோயம்பேடு முதல் தலைமைச் செயலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள சீரழிவை தடுத்து நிறுத்திட, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை தே.மு.தி.க. சார்பில் தலைவர் விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும் கோயம்பேடு முதல் கோட்டை வரை மனிதசங்கிலி போராட்டம் அகிம்சை வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும். இந்த மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு தாய்மார்களும், சகோதர சகோதரிகளும், அனைவரும் பெருந்திரளாக வருகை தந்து இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
|
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சினையை காரணம் கூறி தேமுதிக-வினர் மாலை நடத்த உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி மறுத்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேமுதிக சார்பில் மத்திய மாவட்ட செயலாளா் செந்தாமரை கண்ணன் மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டத்தின் போது போக்குவரத்து பாதிக்குமா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து பாதிக்காத வகையில் போராட்டம் நடத்துவதாக வக்கீல் தகவல் அளித்துள்ளார். போக்குவரத்து இடையூறு பிரச்சினை ஏற்பட்டால் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி தெரிவித்தார். பிற்பகலுக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, மனிதச்சங்கிலி அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

விஜயகாந்த் கைது
இதனிடையே போலீசாரின் அனுமதியின்றி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த தேமுதிக முயன்றனர். கோயம்பேடு தொடங்கி கோட்டை வரை தேமுதிக தொண்டர்கள் கரம் கோர்த்து நின்றனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் விஜயகாந்த் மற்றும் ஏராளமான தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேமுதிகவினரின் போராட்டத்தை போலீசார் ஒடுக்க முயற்சி செய்வதாக கூறினார். என்னை வெளியே விடுவார்களா? சிறையில் அடைப்பார்களா என்பது தெரியவில்லை என்றும் .கூறினார்.

போலீஸ் அராஜகம்
செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, அறவழியில் போராடுபவர்களை கைது செய்வது எந்தவகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். பிரேமலதா உடன் கரம் கோர்த்து மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பிரேமலதா உள்ளிட்ட மகளிர் அணியினரும் கைது செய்யப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் கைது
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேமுதிகவினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட 200 தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் மனிதச்சங்கிலி போரட்டங்களில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில்
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நெல்லை, வீரகேரளம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications