கட்சி உறுப்பினரே இல்லாத சசிகலா புஷ்பா எப்படி சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரலாம்? அதிமுக வாதம்
கட்சி உறுப்பினரே இல்லாத சசிகலா புஷ்பா, சசிகலா நடராஜனுக்கு எதிராக எப்படி வழக்கு தொடர முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எப்படி அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜனை தேர்ந்தெடுக்கக் கூடாது என வழக்கு தொடர முடியும்? என அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜனை நியமனம் செய்ய தடை கோரி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்காமல் மூத்த நிர்வாகிகள் மட்டும் சசிகலா நடராஜனை பொதுச்செயலராக்க முடிவை எடுத்துள்ளதாகவும் இது கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானது; ஆகையால் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இம்மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம் நேற்று விசாரித்தார். அப்போது சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி வாதிட்டார்.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கு இந்த வழக்கைத் தொடர உரிமை இல்லை. ஆகையால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம் எந்தவிதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் அதிமுக, சசிகலா நடராஜன் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications