தகவல் ஆணையர் நியமனம்: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் ஜெ., விஜயகாந்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழக தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஆர். எஸ்.பாரதி நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுப் பெற்ற டி.ஜி.பி. ராமானுஜம், ஆணையர்களாக ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி தட்சணாமூர்த்தி, வழக்கறிஞர் முருகன் ஆகியோர் கடந்த 9-ந் தேதி நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆணையர்களாக நியமிக்கும் நடவடிக்கை சட்டப்படி நடைபெறவில்லை. எதிர்கட்சி தலைவரின் கருத்தை கேட்காமலேயே இந்த 3 பேரையும் ஆணையர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. எந்த சட்டத்தின் அடிப்படையில் தலைமை தகவல் ஆணையராக பதவி வகிக்கிறீர்கள் என்று ராமானுஜத்துக்கும், ஆணையர்களாக பதவி ஏற்றுள்ள தட்சணாமூர்த்தி, முருகன் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு முன்பு, இதுகுறித்து எதிர்கட்சி தலைவரிடம் ஆலோசனை நடத்தவில்லை. அவரது கருத்தை கேட்கவும் இல்லை.
அவருக்கு பெயரளவில் நோட்டீசு அனுப்பி, அவர் வரவில்லை எனக் கூறி ஆணையர்களை தேர்வு செய்திருப்பதை ஏற்க முடியாது. எதிர்கட்சித் தலைவருக்கு முன்பே தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக ஆளுநரின் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், தலைமை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை 8 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications