மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மாற்றுப்பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அரசுத்துறையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளர்கள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களில் மக்கள் நலப்பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், வயது வரம்பை கணக்கிடாமல் கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அக்டோபர் 31-ம் தேதிக்குள் அவர்களுக்கு பணி வழங்காவிட்டால் ஏற்கனவே தந்த ஊதியத்தை தரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.