டாஸ்மாக் போராட்டம்: நாம் தமிழர் கட்சியின் 21 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஹைகோர்ட் உத்தரவு
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சென்னை: டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரசன்னா உள்ளிட்ட 21 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டும், அவர்களின் மீதான வழக்குகளை ரத்து செய்தும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சென்னை திருமுல்லைவாயில் உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 21 பேரும் ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பிரச்சன்னா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது. பிரச்சன்னா தாயார் இறந்து விட்டதால் அவரை பரோலில் விடுவிக்ககோரி கிருபாகரன், பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீட்டனர்.

நீதிபதிகள் கேள்வி
அப்போது நீதிபதிகள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள். நீதிபதிகளின் அறிவுறுத்தலுக்கு பின்னர் அனைவருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று மதியம் விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது என்று கூறிய நீதிபதிகள், இதற்கான உத்தரவை இன்று பிறப்பிப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

போராடுவது குற்றமா?
நீங்கள் வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என்று கூறிய நீதிபதிகள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் போர்டுகளை உடைப்பது குற்றமா என்று கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்களை கைது செய்த திருமுல்லைவாயில் ஆய்வாளரை நேரில் ஆஜராக சொல்லுங்கள் அவருக்கு அபராதம் விதிக்க இருக்கிறோம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

பிரசன்னாவை விடுவிக்க உத்தரவு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசன்னாவை நிபந்தனை இல்லாத ஜாமினில் விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் நேற்று மாலைக்குள் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் உத்தவிட்டும் பிரசன்னாவை விடுவிக்காத சிறை அதிகாதி பதவி வகிக்க தகுதியில்லாதவர் என்று கூறிய அவரை நேரில் ஆஜராக சொல்லுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் கண்டனம்
சிறைத்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கும், அரசு வழக்கறிஞருக்கும் மரியாதை அளிக்க மறுக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவை 11.30 மணிக்குள் விடுதலை செய்ய மீண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தனது உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி கிருபாகரன், கைது செய்யப்பட்ட பிரசன்னா உள்ளிட்ட 21 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

வழக்கும் ரத்து
மேலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications