டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை!
சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் 6 வார கால இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது. பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை. கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிலைக் கடத்தல் பிரிவு தலைவர் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். தனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்து வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.