ராமநாதபுரம்: போலீசார் மீது தாக்குதல் நடத்திய 1,011 பேர் மீது வழக்குப் பதிவு!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 1,011 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேசமயம் போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை அவ்வமைப்பினர் கடைப்பிடித்தனர்.
‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்' என்ற முழக்கத்துடன் சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, மக்கள் பேரணி, பொதுக் கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தப்பட்டன.
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அணிவகுப்பு மற்றும் பேரணி நடைபெற்றது.
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையான அனுமதி பெற்று பேரணியை தொடங்கியதாக அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
அனுமதி மறுப்பு
பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் அந்த அமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று மாலை 4 மணியளவில் குமரையா கோயில் பகுதியில் இருந்து சீருடை அணிவகுப்பு நடத்த முயன்றனர் என்றும் இதை தடுக்க போலீசார் முயன்றனர் என்றும் கூறப்படுகிறது.
கடும் மோதல் தடியடி
அப்போது, போலீசாருக்கும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்த துவங்கினர். இதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுடன் போலீஸார் மீது எதிர் தாக்குதல் நடத்தினர்.
பலத்த காயங்கள்
இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். போலீசார் தாக்கியதில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்டவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் குவிப்பு
இதையடுத்து, வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீஸார் ராமநாதபுரத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், ராமநாதபுரம் டி.ஜ.ஜி. (பொறுப்பு) ஆனந்தசோமானி உள்ளிட்டோர் ராமநாதபுரத்திற்கு இரவோடு இரவாக வந்தனர். தொடர்ந்து ஏராளமான போலீஸார் ராமநாதபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பதற்றம் சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.
1011 மீது வழக்கு
இந்நிலையில், 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 11 பேர் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 1,011 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிகிச்சைக்கு உத்தரவு
இதனிடையே போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.முகம்மது அப்பாஸ் தொடர்ந்த பொதுநல வழக்கினை ஏற்ற உயர்நீதிமன்றக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications