தமிழகத்தின் பழமையான சிலைகளை கடத்த அனுமதிக்க முடியாது - ஹைகோர்ட் நீதிபதி எச்சரிக்கை
தமிழகத்தின் பழமையான சிலைகளை யார் கடத்தியிருந்தாலும் அதை உயர்நீதிமன்றம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று நீதிபதி கூறியுள்ளார்.
சென்னை : சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கும்பகோணத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். சிலை கடத்தலில் அதிகாரிகள் யார் ஈடுபட்டிருந்தாலும் நீதிமன்றம் அவர்களை தப்பிக்க விடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 பஞ்சலோக சிலைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாஷா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்றுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இதைப்போல தஞ்சாவூர் பந்தநல்லூரில் உள்ள பசுபதீசுவரர் கோவில் சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகளே திருடிவிட்டதாக ஆர்.வெங்கட்ராமன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமிப்பதாக கடந்த ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் அவருக்கு திருச்சியை தலைமையிடமாக கொண்டு அலுவலகம் ஒன்றை உருவாக்க தேவையான உத்தரவுகளை தலைமை செயலாளர் ஒரு வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், ரயில்வே பாதுகாப்பு அதிகாரியாகவும், கூடுதல் பொறுப்பாக சிலை தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாகவும் தொடர்வார் என்றும் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக அரசாணையை வெளியிட்டு செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த செவ்வாய்கிழமை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 531 சிலை கடத்தல் வழக்குகளில் பொன்மாணிக்கவேலுக்கு 19 வழக்குகளை மட்டும் விசாரிக்க ஒதுக்கியது ஏன் என்று சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் டி.ஜி.பி. தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி என்று எச்சரித்தார்.
சிலை கடத்தலில் அதிகாரிகள் யார் ஈடுபட்டிருந்தாலும் நீதிமன்றம் அவர்களை தப்பிக்க விடாது என்றும் தமிழக மண் உலகத்திற்கே ஞானபீடமாக உள்ளது; தொன்மையான சிலைகளை கடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கும்பகோணத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்காதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 11ஆம் தேதிக்கு நீதிபதி மகாதேவன் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications