பள்ளி மாணவர்களின் தலைமுடியை வெட்டிய விபரீத தலைமை ஆசிரியை
திண்டுக்கல்: மாணவர்களின் தலைமுடியை வெட்டிய தலைமை ஆசிரியையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகேயுள்ள முத்தழகுப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முத்தழகுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி நேரம் முடிந்து மாணவ, மாணவிகள் வீட்டுக்கு சென்றனர். அதில் 3 ஆம் வகுப்பு மாணவன் விஜயராஜ், 5 ஆம் வகுப்பு மாணவர்கள் மனோஜ் பிரகாஷ், நவீன் பிரதாப், நிர்மல், செபஸ்தியான் ஆகியோர் மட்டும் தலைமுடி தாறுமாறாக வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்கு சென்றனர்.
இது குறித்து மாணவர்களிடம் பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது தலையில் முடி அதிகமாக வளர்ந்து இருப்பதாக கூறி, அந்த 5 பேரையும் அழைத்து தலைமை ஆசிரியை மாணவர்களின் தலைமுடியை வெட்டியதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர். மேலும் தலைமை ஆசிரியையின் செயலை கண்டித்து பள்ளி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், சரவணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திண்டுக்கல்லில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications