வீசிய அனல் காற்று… தவித்த சென்னைவாசிகள்.. 102 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு
சென்னை: சென்னையில் நேற்று வீசிய அனல்காற்றுக்கு மக்கள் ஆடித்தான் போயினர். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் கூட இதுபோன்ற அனலை அனுபவித்திராத மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினர். மீண்டும் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதால் சென்னையில் புழுக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் சென்னையில் குளுகுளு சீதோஷ்ணமே நிலவியது. சாரல் மழையும், குளுகுளு காற்றும் இதமான சூழ்நிலையை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பக் காற்று வீசியது. அனல் காற்றுக்கு சென்னைவாசிகள் அவதிக்கு ஆளாகினர். பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து கருத்து கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி, வழக்கமாக நிலத்தில் காற்றின் அழுத்தம் குறையும்போது, கடலில் உள்ள ஈரப்பதமுள்ள காற்று நிலப்பகுதிக்கு வரும். திங்கட்கிழமையன்று நிலப்பகுதியில் காற்றின் அழுத்தம் குறையாததால் கடல் காற்று நிலப்பகுதியில் நுழைய முடியவில்லை. இதனால் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக பலத்த வெப்பக் காற்று வீசியது என்றார்.
சென்னையில் அதிகபட்சமாக நேற்று 101.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில்,மதுரையில் 99 டிகிரி வெப்பநிலையும், கோவையில் 87 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications