கொளுத்தும் வெயில்... உடம்பெல்லாம் எரியுது... வெளியில் தலை காட்ட அஞ்சும் மக்கள்
நெல்லை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளியில் செல்ல அஞ்சி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்தாண்டு தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் இரண்டாவது வாரத்திலேயே தலை தூக்கி விட்டது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வருகிற மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இந்த கத்தரி வெயிலின் தாக்கம் மே இறுதி வரை நீடிக்கும். இருப்பினும் ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் உக்கிரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

106 டிகிரி வெயில்...
நெல்லையில் 5, 6ம் தேதிகளில் வெயிலின் தாக்கம் 106 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் பகலில் சாலைகளில் செல்பவர்கள் கடுமையான வெப்பத்தை உணர முடிகிறது.

வெளியில் வர அச்சம்...
சாலைகளில் நடந்து செல்பவர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துண்டை போட்டபடியும் செல்கின்றனர். தொடர்ந்து வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியவில்லை.

இளநீர் கடைகளில் கூட்டம்...
வெயில் காரணமாக குளிர்பான கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இது போல் சாலையோரம் உள்ள இளநீர் கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

கோடை மழை...
கோடை மழை இரண்டு நாட்களுக்கு முன்பு தலை காட்டியது. ஆனால் இப்போது சுத்தமாக மழை இல்லை. மாலையில் மேகம் திரண்டு வந்தாலும் மழை பெய்யவில்லை.

நோய்த் தாக்குதல்...
இந்த வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலர் வயிற்று கடுப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications