இன்னும் 2 நாளைக்கு வெயில் வறுத்தெடுக்குமாம்… சொல்றது ரமணன்ப்பா.. உஷாரா இருங்க
இன்னும் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
சென்னை: கடல் காற்று தாமதமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்னரே வெயிலுக்கு மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். இந்நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும் என்று ரமணன் தெரிவித்துள்ளார்.
வெப்பத்தின் ஏற்றம்
இதுகுறித்து வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடல் காற்று வீசுவதைப் பொறுத்தே சென்னையில் வெப்பத்தின் அளவில் ஏற்றம்-இறக்கம் ஏற்படுகிறது.
கடல் காற்று
காலை 10 மணி அளவில் கடல்காற்று வீசத் தொடங்கினால் வெப்பத்தின் தாக்கம் குறையும். ஆனால் கோடை காலத்தில் மதியத்துக்கு மேல் தான் கடல் காற்று வீசத்தொடங்குகிறது.
வெப்பம் அதிகரிப்பு
வெப்பம் நிறைந்த தரைக் காற்றின் வேகம் குறைந்த பின்னரே கடல் காற்று வீசத் தொடங்குகிறது. தற்போது கடல் காற்று தாமதமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து உள்ளது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.
என்ன செய்யலாம்?
வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வெள்ளை நிற பருத்தி ஆடைகளை அணியலாம். மொட்டை மாடிகளுக்கு வெள்ளை நிற சுண்ணாம்பு பூசலாம் என்று ரமணன் ஆலோசனை வழங்கினார்.